ஏழை குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிக்க ஓர் வாய்ப்பு

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

என்ன சொல்கிறது சட்டம்...

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக்  கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இந்த சட்டம் ஆகும்.

அதன்படி, இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து,  ஏழை மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் நேரம்...

வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம்,  பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

இணைய வசதி இல்லாதோர்....

இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர்,  மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

குலுக்கல் முறை...

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையாகக் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாள் அன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளைக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றுக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

More News >>