கோவை சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் - 6 நாட்களுக்குப் பிறகு பிடிபட்ட காமுகன்

கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய காமுகன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்த துடியலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தமது வீட்டின் அருகே 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பிரேத பரிசோதனை முடிவில் அச்சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பலர் கொடூர கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல்கள் வெளியாகி, தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கோவை சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியது யார் என்பதை கண்டுபிடிப்பதும் போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனால் தனிப்படைகள் அமைத்தும், துப்புக் கொடுத்தால் சன்மானம் தருவதாக நோட்டீஸ் அடித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது சிறுமி கொலைச் சம்பவம் நடந்து 6 நாட்களுக்குப் பின் சந்தோஷ்குமார் என்ற காமுகனை போலீசார் கைது செய்துள்ளார். இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டது சந்தோஷ்குமார் மட்டும்தானா? வேறு யாருக்கும் தொடர்புண்டா? என்பது குறித்து சந்தோஷ் குமாரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.

More News >>