அதே பெயர்..., சின்னமோ குக்கர்...தினகரனை திட்டமிட்டு பழிவாங்கிய அதிமுக

நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயரிலேயே சுயேட்சைகளை களமிறக்கி அவர்களுக்கு குக்கர் சின்னமும் வழங்கச் செய்து திட்டமிட்டு தினகரன் தரப்பை பழி வாங்கியுள்ளது அதிமுக. இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்திருக்குமோ என்ற கேள்வியும் எழாமலில்லை.

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கடைசி வரை போராடிப் பார்த்தார் டிடிவி தினகரன். தேர்தல் ஆணையமே பிடிவாதமாக குக்கர் ஒதுக்க முடியாது என்று கூறி விட்டது. இதனால் தினகரனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கடைசியில் ஏதாவது ஒரு பொதுச் சின்னம் வேண்டும் என மன்றாடிக் கேட்டதால் பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்துள்ளது. அத்துடன் குக்கர் சின்னத்தை சுயேட்சைகள் பட்டியலில் இடம் பெற வைத்து விட்டது தேர்தல் ஆணையம்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களைப் பார்க்கும் போது, தினகரனுக்கு எதிராக திட்டமிட்டு பெரும் சதியே நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பல தொகுதிகளில் அமமுக வேட்பாளரின் பெயரிலேயே சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்துக்கு அடுத்தபடியாக குக்கர் சின்னமும் இடம் பெறும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரிர் டிடிவி கட்சியின் வேட்பாளர் எஸ். காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். அடுத்து இன்னொரு சுயேச்சையான பி.காமராஜ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டி பட்டியில் டிடிவி வேட்பாளர் பெயர் டிகே ராஜேந்திரன். இங்கு சி. ராஜேந்திரன் என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அ௹ரில் டிடிவி வேட்பாளர் ஆர். முருகன் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பி.முருகன் என்ற பெயரில் சுயேட்சை ஒருவர் நிறுத்தப்பட்டு அவருக்கும் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது

இது போன்று சாத்துரில் அமமுக வேட்பாளர் எஸ் சி சுப்பிரமணியனுக்கு போட்டியாக குக்கர் சின்னத்தில் சுப்பிரமணியனும் நிறுத்தப்பட்டுள்ளார்.இது போன்றே இன்னும் சில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயர்களில் சுயேட்சைகள் நிறுத்தப்பட்டு தினகரனுக்கு எதிராக ஒரு பெரிய சதியையே ஆளும் தரப்பு நிகழ்த்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணைய தரப்பும் உடந்தையாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை.

More News >>