சவுதி ரகசியமாக கட்டிய அணுஉலை! காட்டிக் கொடுத்த செயற்கைக் கோள் படம்

சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து  பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக  ரியாத்தில்  உள்ள  கிங்  அப்துலஜிஸ் நகரத்தில் இந்த அணு உலையானது அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் உயர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலையைச் சுற்றி, பெரிய உருளைகள் உள்ளன. அதில்,  ரேடியம்,  யூரேனியம்  போன்ற அணு எரிபொருள் அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படத்தில் தெளிவாகக் காட்டுகிறது.

உலகில் அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் மின் தேவையின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை ஈடு செய்யும் வகையில், 2030-ம் ஆண்டுக்குள் 16 அணுமின் நிலையங்களை அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

அணு உலை, தொடங்குவதற்கு முன் குடிமக்களுக்கு எதிராக அதாவது, ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்களுக்குப்  பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இருப்பினும், சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களில் சவுதி அரசு கையெழுத்திடவில்லை. இப்படி, இருக்கையில் ரியாத்தில் அணு உலைக் கூடம் அமைக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன், காரணமாக ஆயுதங்கள் கட்டுப்பாட்டு நிபுணர்களிடம் அதிருப்தி நிலவுகிறது.

முன்னதாக, ஈரான் அணு குண்டுகளை உற்பத்தி செய்யுமாயின், தானும் அதில் இரண்டாம் தரமாகப் போவதில்லை என சவுதி கூறியிருந்தது. இது குறித்து சர்வதேச அணுசக்தி  ஏஜென்சியின் முன்னாள் இயக்குநர், ராபர்ட் கெல்லி கூறுகையில், ‘செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, மிக அதி நவீனத் தொழில்நுட்பத்துடன், அணு உலை பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. ஆகையால், சவுதி அரேபியா மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அந்நாட்டு ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ‘இந்த அணு உலை வெளிப்படையான முறையில் கட்டமைக்கப்பட்டு, வெளிப்படையான முறையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க அமைதியான முறையில், அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும்’  எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அணு ஆயுதங்களை அதிகளவில் சவுதியில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

More News >>