அவசரப்பட்டு அறைந்த செம்மலை அதிமுக கிளை செயலாளர் உள்பட 500பேர் திமுகவில் இணைந்தனர்

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது, அன்புமணி ராமதாஸிடம் கேள்விக் கேட்டதற்காக செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் 500 அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் கூட்டணி வைத்துள்ள அன்புமணி ராமதாஸ், மீண்டும் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் அன்புமணி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் சிந்தாமணியூரில் பிரசாரம் மேற்கொண்டு இருந்த அன்புமணியின் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார், அன்புமணியிடம் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.

ஆனால், அவற்றை சிறிதும் காது கொடுத்து கேட்காதவரைப் போல இருந்த அன்புமணி தொடர்ந்து, பேசி வந்தார். ஆனால், கிளை செயலாளர் செந்தில்குமார், அன்புமணியை விடுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அன்புமணிக்கு அருகில் வந்து கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செம்மலை, தனது பொறுமையை இழந்து, செந்தில்குமாரை பளார்.. பளார்.. என அறைந்தார்.

அதன் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது, அதிமுகவில் இருந்து, திமுக கட்சியில் செந்தில்குமார் இணைந்துள்ளார்.

திமுக மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் முன்னிலையில், செந்தில்குமார், தனது ஆதரவாளர்களான அதிமுகவை சேர்ந்த 500 பேரை தன்னுடன் சேர்த்து திமுகவில் இணைத்துள்ளார்.

 

More News >>