ராணுவத்தை மோடியின் படை என விமர்சித்த உ.பி.முதல்வர் .!நடவடிக்கை இன்றி லவ் லெட்டர் போல் அறிவுரை மட்டுமா..? தேர்தல் ஆணையத்தை சாடிய காங்.

இந்திய ராணுவத்தை மோடியின் படை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கையும், அறிவுரையும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம் . இதற்கு காங்கிரஸ் கட்சி, என்ன லவ் லெட்டரா? என்று கடும் விமர்சனம் செய்துள்ளது.

இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. பாஜகவைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் வி.கே.சிங் கூட யோகியின் பேச்சுக்கு காட்டமாக, இந்திய ராணுவம் என்பது இந்தியாவுடையது.அதனை யாரேனும் மோடியின் படை என்று கூறினால், அவர்கள் தேசத்துரோகிகள் என்று விமர்சித்திருந்தார்.

மேலும் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் குவிந்தன.இதையடுத்து தேர்தல் ஆணையம் ,யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு, அதற்கு அவரும் பதிலளித்திருந்தார்.

யோகி ஆதித்ய நாத் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறிய தேர்தல் ஆணையம் ,இனி வரும் காலங்களில், இது போன்று இந்திய ராணுவத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துவதாக கூறி. இதனை எதிர்காலத்திலும் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவித்து பிரச்னைக்கு முடிவு கட்டியது.

தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மென்மையாக எச்சரிக்கை வி0க்க துடன் நிறுத்திக் கொண்ட தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல் படுவதை விட்டு, அதிகாரத்தில் இருப்பவர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் மென்மையான போக்கை கையாள்கிறது. ஏற்கனவே காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் 5 கோடி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் விமர்சனம் செய்து நடத்தை விதிகளை மீறி புகாருக்கு ஆளானார். அப்போதும் இனிமேல் இப்படி பேசக் கூடாது என்று அறிவுரை வழங்கிய தேர்தல் ஆணையம் , இப்போது யோகி ஆதித்ய நாத் மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வெறும் அறிவுரையும், எச்சரிக்கையும் மட்டும் விடுப்பது ஏன்? ஏதோ லவ் லெட்டர் எழுதுவது போல் உள்ளது என்று தேர்தல் ஆணையத்தை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார்.

இதே போல் இந்திய ராணுவத்தை மோடியின் படை என்று வர்ணித்த யோகி ஆதித்யநாத் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

More News >>