பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம் -கல்லூரி மாணவி சடலமாக மீட்பு

காணாமல் போன கோவை அரசுக் கல்லூரி மாணவி, பிரகதி பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார். 

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் கல்லூரி பெண்களை 4 பேர் கொண்ட கும்பல் கடந்த 7 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் பொள்ளாச்சி அருகே நிகழ்ந்துள்ளது. கோவை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி பிரகதி. திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகள். அடுத்த மாதம் மாணவிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பிரகதி திடீரென காணாமல் போனார்.

இதனையடுத்து, கோவை காட்டூர்(காந்திபுரம்) காவல் நிலையத்தில் பிரகதியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே  பூசாரிபட்டி வாய்கால்மேடு பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிரகதியின் சடலம் அரை நிர்வாண நிலையில் கிடந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  

பிரகதியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதால், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர், பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த கொடூர கொலை குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்படி, நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சியை மையப்படுத்தி இளம் பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். போலீஸாரும் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.

More News >>