தேர்தல் நாளில் ஐ.டி. ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தேர்தல் நாளன்று ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று பொதுவாக முறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் பல தனியார் நிறுவனங்களும், ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய கார்பரேட் நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள, 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, வரும் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனவே, ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கூறினார்.

More News >>