அமெரிக்காவுக்கும் ஒரு பக்ஷி ராஜன் தேவை.. ஸ்கைஸ்க்ரேப்பர்களால் கோடிக்கணக்கில் பலியாகும் பறவைகள்

அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கும் வானுயர்ந்த கட்டடங்களான ஸ்கைஸ்க்ரேப்பர்களால் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்‌ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் பக்‌ஷி ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். செல்போன் சிக்னல்களால் பறவைகள் அழிந்து வருவதால், செல்போன்களை கொண்டு செல்போன் பயன்படுத்துவர்களை அழிக்க முனைவார்.

ஆனால், அமெரிக்காவில் பறவைகளுக்கு வேறுவிதமான அபாயம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள ஸ்கைஸ்க்ரேப்பர்களில் மோதி கோடி கணக்கில் பறவைகள் உயிரிழப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சிகாகோவில் உள்ள ஸ்கைஸ்க்ரேப்பர்களால் தான் அதிக அளவிலான பறவைகள் உயிரிழந்துள்ளன. பெரும்பாலும், ஸ்கைஸ்க்ரேப்பர்கள் கண்ணாடி மாளிகையாக வடிவமைக்கப்படுவதே இதற்கு முதன்மை காரணம் என பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வானில் பறக்கும் பறவை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டு அதன் அலகுகளை கொண்டு அதனுடன் உறவாட தொடங்கும். ஆனால், அதை கொத்தி கொத்தி பித்துப் பிடித்து, துடி துடித்து உயிரிழப்பது தான் மிஞ்சும் என ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கூறினர்.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பறவைகள் வசந்த காலத்தின் போது அங்கு வந்து செல்கின்றதாம். 250 வகையான பறவைகள் உணவுகளை தேடி சுமார் 2 ஆண்டுகால பயணத்தை மேற்கொள்ளும் போது, ஸ்கைஸ்க்ரேப்பர்களில் மோதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றன.

மனிதனின் ஆகாயக் கோட்டைகள், கூடு கட்டி வாழும் சின்னஞ்சிறு பறவை இனங்களை அழித்து வருவதை உணரவும் அவைகள் உயிர்வாழும் உபாயத்தையும் தேட மறுக்கின்றன.

மான்ஹாட்டனில் உள்ள ஸ்கைலைன் கட்டடம் பறவைகளுக்கான சவக் குழியாகவே விளங்குகிறது. நகரமயமாக்குதல் மற்றும் நவீன மயமாக்குதல் பேரில், இயற்கையை மனிதன் அழித்து வருவது அவனுடைய அழிவுக்கும் சேர்த்துத்தான்.

More News >>