அமேதியில் ராகுல் வேட்பு மனு.... பேரணியில் கணவர், மகன், மகளுடன் பங்கேற்ற பிரியங்கா

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேரணியாகச் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேரணியின் ராகுலுடன், பிரியங்கா காந்தி தன் கணவர், மகன், மகள் சகிதம் பங்கேற்று தொண்டர்களுடன் ஆரவாரம் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உ.பி.யின் அமேதி, கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் 23-ந் தேதி தேர்தல் நிலையில், கடந்த வாரம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அமேதி தொகுதியில் அடுத்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக சின்னஞ் சிறு அமேதி நகரின் முக்கிய வீதிகளில் ராகுல் காந்தி பேரணியாகச் சென்றார். இந்தப் பேரணியில் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரைஹான், மகள் மிராயா ஆகியோர் சகிதம் உற்சாகமாக தொண்டர்களுடன் கையசைத்தபடி சென்றார்.

பேரணி அமேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றவுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சோனியா காந்தியும் உடனிருந்தார். ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்வதை முன்னிட்டு அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணியில் பங்கேற்றனர்.

More News >>