பண மூட்டைகளுடன் பெரு முதலைகள்...! காசில்லாமல் தேர்தல் களத்தில் தத்தளிக்கும் காம்ரேட்ஸ்

தெருமுனைகளில் கொள்கை முழக்கம் போட்டு, உண்டியல் ஏந்தி வசூல் செய்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தத் தேர்தலில் பெரும் பண முதலைகளை எதிர்த்து செலவழிக்க முடியாமலும் ஈடு கொடுக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடி தலா 2 தொகுதிகளைப் பெற்று விட்டனர். வேட்பாளர் தேர்விலும் தகுதியானவர்களை தேர்வு செய்து விட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் முன்னாள் எம்.பி. சுப்பராயன், நாகையிலும் முன்னாள் எம்.பி. செல்வராஜ் ஆகியோரை நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியும் தொகுதிக்கு முன்னாள் எம்.பி.நடராஜன், மதுரைக்கு புதுமுக வேட்பாளராக இருந்தாலும் நன்கு அறிமுகமான எழுத்தாளர் வெங்கடேசனை வேட்பாளராக்கி விட்டனர்.தமிழகக் கட்சிகளில் ஆராய்ந்து, கட்சியில் விவாதித்து தீர்மானம் போட்டு, ஜனநாயக வழியில் வேட்பாளர்களை தேர்வு செய்தது இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே தான் என்றால் அது தான் உண்மை.

மற்ற கட்சிகள் எல்லாம் வாரிசுகள், பிரபலங்கள், பண முதலைகளை களம் இறக்கி களத்தில் பணத்தை தண்ணீராய் செலவழிக்கின்றனர். துட்டு கொடுத்தால் மட்டுமே உடன் பிரச்சாரத்திற்கு வருவோம் என்று சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளே ஆட்டம் காட்ட, கட்சித் தொண்டர்களும், வாக்காள ஜனங்களும் அதற்கும் ஒரு படி மேலே போய், பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவும், ஆரத்தி எடுக்கவும்,கொடி பிடிக்கவும் தனித்தனியே காசைக் கறக்க ஆரம்பித்துவிட்டனர். பணவசதி படைத்த வேட்பாளர்களும் தாராளமாய் பணத்தை தண்ணீராய் செலவழிக்கின்றனர்.

இப்படி எதற்கெடுத்தாலும் வைட்டமின் 'ப' தான் பிரதானமாகிப் போன நிலையில் பிரச்சாரத்தில் எப்போதும் எளிமையை கையாளும் காம்ரேட்களுக்கு பெரும் பின்னடைவாக போய் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதனால் வெற்றி வாய்ப்பிருந்தும், எதிர்த்தரப்பினரின் கடைசி நேர பணப்பட்டுவாடா சமாச்சாரங்களால் வெற்றி பறிபோய்விடுமோ? என்ற பதைபதைப்பில் காம்ரேட்டுகள் உள்ளனர். காம் நேட்களின் இந்த பரிதவிப்பைக் கண்ட திமுக தலைமை, உரிய ஒத்துழைப்பு கொடுத்து காம்ரேட்களை கரையேற்றி விட வேண்டும் என்று தம் கட்சி நிர்வாகிகளுக்கு கடைசி நேரத்தில் சவுக்கை சுழற்றியுள்ளதாகவும் தகவல்.

More News >>