ஹெச்.ராஜாவுக்காக... பிரார்த்தனையில் குதித்த மதுரை ஆதீனம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில், திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி, அயராது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வேட்பாளர்கள்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‘பாஜக தலைவர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் எனப் பிராத்திக்கிறேன். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் போட்டியிடுகின்ற பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி எல்லாவல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இதுவே, எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவும் அமமுகவும் இணையும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை டிடிவி தினகரனுடன் நடந்து வருவதாக ஆதீனம் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதனை, மறுத்த டிடிவி ஆதீனத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

More News >>