தேர்தல் ஆரம்பம்: 20 மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு!

17வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமானது. ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் முதற்கட்டமாக இன்று ஆரம்பமாகியுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விட்டது.

பொதுமக்கள் காலையிலேயே உற்சாகமாக நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஒருசில இடங்களில் சிறிது காலதாமத காரணத்தினால், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் 17, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, , திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

அதுபோலவே, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் இன்று நடக்கிறது. ஆந்திராவில் அடுத்த முதல்வர் யார் என்று மக்கள் தேர்வு செய்யும் தேர்தலும் அங்கு நடப்பதால், ஆந்திர தேர்தலை நாடு முழுவதும் நோக்கி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

அடுத்த முதல்வராக தற்போது உள்ள சந்திரபாபு நாயுடுவே தொடர்வாரா? அல்லது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பாரா? மேலும், நட்சத்திர வேட்பாளரான பவண் கல்யாண் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார் என ஆந்திராவில் தேர்தல் யுத்தம் அனல் பறந்து வருகிறது.

முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள 2-ம் கட்ட தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும், அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

இன்று நடைபெற உள்ள 20 மாநிலங்களுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கை உயர்கிறதா? அல்லது பாஜக தாமரை மலர்கிறதா? என்பதை அறிய நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

 

"இப்போது உண்மை வெளிவந்துவிட்டது மிஸ்டர் மோடி" - காங்கிரஸ் கடும் சாடல்
More News >>