அரிவாள், கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட பயங்கரம்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

பட்டரவாக்கம் ரெயில் நிலையம் வந்த போது இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர் தினேஷ், ஜெகதீஷ்குமார், அஜய் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் ரெயில் பயணிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பன் கல்லூரி மாணவரான திருநின்றவூரை சேர்ந்த மோகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 11 மாணவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மோதல் தொடர்பாக தினேஷ்குமார், ராம்சுந்தர், சுரேந்தர் ஆகிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆவர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

More News >>