1,114 வாட்ஸ் அப் குரூப்களை நிர்வகிக்கும் பாஜக அட்மின் இதனால் தான் ஃபேக் நியூஸ் பரவுகிறதா?

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் தொடங்கி விட்ட காலத்தில் இந்த அட்மின்கள் தொல்லைத் தாங்க முடியவில்லை. அமைச்சர்கள், பிரபலங்கள் தங்கள் பேரில் சமூக வலைதளங்களை ஆரம்பித்து விட்டு, அதனை அட்மின் ஒருவரை வேலைக்கு அமர்த்தி நிர்வகிக்கின்றனர்.

அவர் அக்கவுண்டில் இருந்து தவறான பதிவோ அல்லது சர்ச்சையை கிளப்பும் பதிவுகளோ வெளியே வந்தால், நான் போடலை என் அட்மின் தான் போட்டார் என எச். ராஜா தப்பித்துக் கொண்டது போல தப்பித்துக் கொள்கின்றனர்.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் எனும் மாவட்டத்தில் பாஜகவின் வாட்ஸ்அப் குரூப்களை நிர்வகித்து வரும் தீபக் தாஸ் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர், தனக்கு கட்சியால் வழங்கப்பட்ட 2 செல்போன்களைக் கொண்டு இரவு பகல் பாராமல், பாஜகவின் புகழ்பாடும் செய்திகளையும், மற்ற கட்சியினர் குறித்த சர்ச்சை செய்திகளையும் ட்ரெண்டாக்கி வரும் பணியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் போது, இரவு  முழுவதும் தூங்காமல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளை பரப்பியதாக கூறிய அவர், நாடு முழுவதும், பாஜகவின் ஐடி விங் மிகப் பெரியது என்றும், தனக்கு மாதத்துக்கு தேவையான சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

வெறும் 12வது மட்டுமே படித்த இவர், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தலில் பாஜகவுக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக மிகப்பெரிய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

36வயதான தீபக் தாஸ், தன்னிடம் உள்ள ஒரு நம்பரில்  229 வாட்ஸ் அப் குரூப்களை உருவாக்கி அதற்கு அட்மினாக இருப்பதாகவும், இன்னொரு நம்பரில் 885 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அட்மினாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஃபேக் நியூஸ் எனும் பொய்த் தகவல்கள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் இன்ஜினியரிங் படித்து விட்டு மீம்ஸ் போடும் சாதாரண இளைஞர்களால் அல்ல, நாட்டில் உள்ள பெரிய பெரிய கட்சிகள், பொதுமக்கள் என்ற போர்வையில் சமூக வலைதள அட்மின்களை நாடு முழுவதும் உருவாக்கி இருப்பதே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவரால், எப்படி 1100 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அட்மினாக இருக்க முடியும். வாட்ஸ் அப் நிறுவனம் எந்த விதமான பாதுகாப்பு அம்சத்தை பின்பற்றுகிறது போன்ற பல கேள்விகள் தீபக் தாஸ் பற்றிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் இதுபோல எத்தனை தீபக் தாஸ்கள் சமூக வலைதள போலி போராளிகளாக உள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

More News >>