நரேந்திர மோடி காவலாளி அல்ல களவாணி சேலத்தில் ராகுல் காந்தி சரவெடி!

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடக்கிறது. இதனால், தமிழகத்தில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணாவும், தந்தை பெரியாரும் இப்போது இருந்திருந்தால், மோடியின் சர்வாதிகாரத்தை ஒழிக்கப் போராடும் ராகுல் காந்திக்கு ஆதரவை தெரிவித்து பாராட்டியிருப்பார்கள் என்றார்.

பின்னர் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் காவலாளி அல்ல களவாணி என பேசினார். நாட்டு மக்களின் பணங்களை டிமானிசேஷன் எனும் பணமதிப்பிழப்பு மூலம் கொள்ளையடித்து, மல்லையா, நிரவ் மோடி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்கியுள்ளார் என குற்றஞ்சாட்டினார்.

மேலும், தங்களின் ஆட்சி வந்தால், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலமானாலும், மாணவர்கள் விரும்பினால் தான் நீட் தேர்வு என்றார். மேலும், தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ் ஆழ அனுமதிக்க வேண்டாம், தமிழகத்தை ஒரு தமிழர் தான் ஆளவேண்டும் என மு.க.ஸ்டாலின் மனம் குளிரும்படி பேசினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களின் தேவையை அறிந்து உருவாக்கப்பட்டது என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை போல இருட்டு அறையில் யாரோ சிலர் முடிவெடுத்து உருவாக்கப்பட்டதை போல உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், வறுமைக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இணைந்து உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் என்று கூறினார்.

More News >>