பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ல் குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாகுபா மேனக் .இவர் வேட்பு மனு செய்த போது, மனுவை முன்மொழிந்தவர், தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாள் மேராமன் ஆகிர் என்பவர் ஆட்சேபித்தும், அதனை ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி விட்டார் பாகுபா மேனக் .

பாகுபா மானக் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவரை தகுதி நீக்கம் செய்து தாம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மேராமன் ஆகிர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாயா இன்று தீர்ப்பளித்தார்.

அதில் பாஜக சார்பில் போட்டியிட பாகுபா மேனக் வேட்பு மனு தாக்கல் செய்ததில் தவறு இருப்பதை உறுதி செய்த நீதிபதி, பாகுபா மேனக் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 4 வார கால அவகாசம் கோரினார் பாஜக எம்எல்ஏ பாகுபா மேனக். அதையும் ஏற்க மறுத்த நீதிபதி, துவாரகா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டு தீர்ப் பளித்தது குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>