ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்திரமாக நடத்தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நில ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி உள்பட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு மீதான விசாரணையில் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த அமர்வு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனியாக சட்டம் இயற்றுவதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து முடிவு எடுக்கும் எனவும் கூறப்பட்டது.

More News >>