போதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற மனைவி

விராலிமலையில் குடிபோதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>