நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல்! அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரசிய தகவல்கள் இதோ...

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்ரவர்த்திகளாகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் தேசிய அளவில் கணம் ஈர்த்துள்ளது தமிழக தேர்தல் களம். அதன் வகையில், நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் குறித்த சில சுவாரசிய தகவல்களை இங்குப் பார்ப்போம்..

*தமிழக அரசியலில் மிகப்பெரிய தலைவர்களான தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. தலைவர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தலாகும். இதன் காரணமாக எக்கசக்கமாக எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

*கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க ஸ்டாலினின் தலைமைத்துவம் இந்த தேர்தலின் முடிவை பொறுத்தே கணக்கிடப்படும். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமைத்துவம் மற்றும் அதிமுகவை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதும் தேர்தலில் தெரியவரும்.

*தமிழக தேர்தல் களத்தில் போட்டியில் பல கட்சிகள் இருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இவ்விரு கூட்டணிகளும் பெரிதாக, அதாவது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

*தமிழக அரசியலில் புதிதாக கட்சிகளை தொடங்கிய இரண்டு நபர்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளனர். ஒருவர், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றொருவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன்.

*39 மக்களவைத் தொகுதிகளுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. அதோடு, அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 29ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், ஆளும் அதிமுக அரசு, தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

*இந்த தேர்தலில் திமுக தலைமையில், காங்கிரஸ் உட்பட ஒன்பது கட்சிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளன.

*இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க 20 இடங்களைப் போட்டியிடுகின்றன என்றாலும், எட்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. (தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் நெல்லை)

*39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசுப்பெட்டி சின்னத்திலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக – திமுக வாக்குகளைப் பிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

*பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு தேசிய கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் கூட்டணியை அமைத்துள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் உருவாக வாய்ப்பும் உள்ளதாக அரசியல் சுழல் அமைந்துள்ளது.

More News >>