16 கோடி ரூபாய் செலவு - சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு வெளியிட்ட ஆர்டிஐ தகவல்

சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புக்கென செலவிடப்பட்ட தொகை விவரங்களை கேரள அரசு தெரிவித்துள்ளது.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதன்பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயன்றனர். இதில் கலவரம் வெடித்தது. பின்னர் கனதுர்கா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் கருப்பு உடை அணிந்துக் கொண்டு சபரி மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கல்வீசி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இதனால், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவியதால் அங்கு அதிகப்படியான போலீஸ் குவிக்கப்பட்டது.

இந்த பிரச்னையின்போது சபரிமலையில் நிறுத்தப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேரள அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த அகில்பாபு என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டிருந்த நிலையில் அதற்குக் கேரள அரசு தற்போது பதிலளித்துள்ளது. அதில், மண்டல பூஜையின்போது மட்டும், 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டதாகவும், இவர்களில் 10 டிஐஜி, 42 எஸ்.பி.க்கள், 700க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது மட்டும் போலீசாருக்கென மொத்தம் 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், இதுபோக உணவுக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

`இந்த வீட்டையும், உங்க சாப்பாட்டையும் மறக்கமாட்டேன்' - கேரள தம்பதியினரை நெகிழவைத்த சுரேஷ்கோபி
More News >>