மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சுமார் மூன்று கடைகளில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் புத்தக கடை, பொருட்கள் கடை உள்பட பல கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இங்கு நேற்றிரவு அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். தீ வேகமாக பரவியதை அடுத்து, உடனடியாக தல்லாக்குளம், பெரியார் நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. மேலும், இதன் எதிரொலியாக கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>