ஓட்டுப் போட போங்க.. தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளில் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி என மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மேலும், தமிழ்நாட்டின் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே தனது வாக்கினை பதிவு செய்தார்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதால், அங்கு இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை, விடுமுறை கிடைத்துவிட்டது என்பதற்காக வீட்டில் ஓய்வெடுக்காமல், வெயில் அடிக்கிறது என்று ஏசி ரூமில் பதுங்கி கொள்ளாலமல், வாக்களிக்க செல்லுங்கள்!

More News >>