இன்னொரு சர்கார் வந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்குமா? நடிகர் ரமேஷ் கண்ணா ஆவேசம்

நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லை என தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், ஆவேசம் அடைந்த அவர், இன்னொரு சர்கார் படம் வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என ஆவேமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநரும் பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதற்காக காலை 6 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், முதல் ஆளாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவில் வாக்களிக்க சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கு பூத் ஸ்லிப் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

தன்னிடம் வாக்காளர் அட்டை உள்ளது என்றும், ஏன் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும், ஒரே வீட்டில் உள்ள எனது மனைவிக்கு ஓட்டு இருக்கிறது. எனக்கு ஏன் இல்லை எனவும் ஆவேசம் அடைந்த நடிகர் ரமேஷ் கண்ணா, விமான நிலையத்தில் இருந்த படி தேர்தல் அதிகாரிகளை நோக்கி கேள்விகளை கேட்ட வண்ணம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் 49 பி என்பதை அறிமுகம் செய்தனர். பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லாத காரணம் சொல்லி பலரது வாக்குகள் வீணடிக்கப்படுவதற்கு இன்னொரு சர்கார் படம் எடுத்தால் தான் தீர்வு கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே பல வாக்காளர்கள், தங்களிடம் வாக்காளர் அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்திற்காக ஓட்டுப் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

100 சதவீத ஓட்டு என விளம்பரப்படுத்தும் தேர்தல் அதிகாரிகள், 100 சதவீத மக்கள் பெயர் முதலில் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டுமா இல்லையா என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

More News >>