பாலியல் வழக்கை வாபஸ் வாங்காத மாணவி.. மண்ணெய் ஊற்றிக் கொன்ற கொடூர தலைமை ஆசிரியர்

வங்கதேசத்தில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் வழக்கை தொடுத்த மாணவி நஸ்ரத் ஜஹான் ரஃபி அதனை வாபஸ் பெற மறுத்ததால் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் தீயிட்டு கொளுத்திய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த 19வயது பள்ளி மாணவி நஸ்ரத் ஜஹான் ரஃபிக்கு அவரது பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து போலீசில் ரஃபி புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அந்த குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி பள்ளிக்குச் சென்ற நஸ்ரத் ஜஹான் ரஃபியிடம் வழக்கை வாபஸ் வாங்கு இல்லையெனில் உன்னை கொலை செய்துவிடுவேன் என அந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார். அதற்கு சிறிதும் அஞ்சாத ரஃபி வாபஸ் பெற முடியாது எனக் கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் சிலரின் துணையுடன் ரஃபியை கட்டிப் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி அவரை துடிதுடிக்க சாகடித்துள்ள சம்பவம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் அந்த பெண் அவரே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், வங்கதேசம் முழுவதும் ரஃபியின் மரணம் தொடர்பான சந்தேகம் கிளம்பி பெரியளவில் போராட்டம் வெடித்ததால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தீயிட்டு கொளுத்தியதால், அவரது கையை கட்டியிருந்த துணி எரிந்து விடுபட்ட அவர், தனது சாவு குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். பின்னர் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஃபி சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார். இந்த வீடியோ பதிவு கிடைத்தவுடன் தான் தலைமை ஆசிரியர் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

பழங்குடி சிறுமிகளை சீரழித்த அதிகாரி உள்பட 2 பேர் கைது..
More News >>