பரிசுப் பெட்டகமே மீண்டும் கேட்போம்! டி.டி.வி. தினகரன் பேட்டி!!

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே கேட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரனுடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இது வரை ஒரு அமைப்பாகவே இயங்கி வந்தது. இதனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தங்கள் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னம் கேட்டதற்கு தேர்தல் கமிஷன் தர மறுத்தது. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் தரப்படும் என்று தெரிவித்தது. அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையின் போது அ.ம.மு.க.வை கட்சியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யத் தயாராக உள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

அதனடிப்படையில், தற்போது அ.ம.மு.க. ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படுகிறது. சென்னை அசோக்நகரில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர், நேற்றிரவு டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். சசிகலாவிடம் ஆலோசனை செய்து விட்டுதான், கட்சியாக பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அவரது ஆலோசனைப்படி நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

சசிகலாவுக்காக அ.ம.மு.க தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்.22-ல் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம்! தினகரன் ஆவேசம்
More News >>