நாட்டாமைக்கு பதவிக்கு போட்டி: 2 பேர் வெட்டிக் கொலை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன். அவர் அந்த கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் கிளை செயலாளராகவும் அவர் இருக்கிறார். இளங்கோவன் தொடர்ந்து நாட்டாமையாக இருக்க, அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரை சார்ந்த நபர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. ஏற்கெனவே இதுதொடர்பாக இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு, இளங்கோவனும் அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் உள்ள கோவில் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வேல்முருகன் தரப்பினர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இளங்கோவன் தரப்பினரை ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளனர். இதில் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

ரத்தம் சொட்ட சொட்ட மயங்கிக் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இளவரசன், தங்கமணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கவலைக்கிடமாக உள்ள 6 பேர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவுவதன் காரணமாக, நீடூரில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்
More News >>