10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு?-தமிழக தேர்தல் ஆணையம்

தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில்  மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சில இடங்களில் கள்ள ஓட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதோடு, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், சிதம்பரம் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பா.ம.க. மற்றும் வி.சி.க. கட்சியினருக்கு இடையே மோதல் நடைபெற்றது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. கடலூர் 1, திருவள்ளூர் 1, தருமபுரி 8, என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் குறித்து, பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்து இன்று மாலை அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அறிக்கையைப் பொறுத்துத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். மேலும், அரியலூர் பொன்பரப்பி தொகுதிகளில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது. இருதரப்பினர் இடையே ஊருக்குள் மட்டுமே கலவரம் நடந்துள்ளது. வாக்குச்சாவடி பகுதியில் கலவரம் நடக்க வில்லை’ என்றார். 

More News >>