5 வருடத்தில் குண்டு வெடிப்பே இல்லையா..! மோடிக்கு ஞாபக மறதியா...! பட்டியலிட்ட ப.சிதம்பரம்

கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ள பிரதமர் மோடி, தமது 5 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிடுவதை விட்டு விட்டு, இந்திய ராணுவத்தையே பெரிதும் நம்புகிறார். தேர்தல் ஆணையம், உச்சநீதி மன்றம் போன்றவை எத்தனை தான் கெடுபிடி போட்டாலும், சமீபத்தில் பாகிஸ்தான் மீது தொடுத்த தாக்குதலையே பிரதானமாக பேசி வருகிறார்.

விமானி அபிநந்தனை திருப்பி ஒப்படைக்காதிருந்தால், பாகிஸ்தான் நிலைமை என்ன ஆகியிருக்கும் தெரியுமா? இந்தியா அணுகுண்டு வைத்திருப்பது என்ன தீபாவளிக்கு வெடி வெடிப்பதற்கா? என்றெல்லாம் சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று பிரச்சாரம் செய்த மோடி, பாஜகவை மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். அத்துடன் இல்லாமல் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவமுமே நடக்கவில்லை என்று அதிரடியாக ஒரு குண்டு போட்டார்.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார். நாட்டில் குண்டு வெடிப்பே நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி. அவருக்கு ஞாபக மறதியாகிவிட்டது போலும். யாராவது அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் நடந்த இத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் ஞாபகப்படுத்துங்களேன் என்று ஒரு பட்டியலையே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த 2014-ல் டிசம்பர் 5-ம் தேதி காஷ்மீரின் மோஹ்ராவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, 2015-ல் சத்தீஸ்கரில் தண்டேவாடா, 2016-ல் பாலமு, அவுரங்காபாத், 2017-ல் ஒடிசாவின் கோராபுட், சுக்மா தாக்குதல் முதல் இந்த மாதம் 14-ந் தேதி தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வரை ப.சிதம்பரம் வெளியிட்ட அந்த பட்டியல் நீள்கிறது.

சிறு மற்றும் குறுதொழில்களை அழித்ததுதான் மோடியின் உண்மையான சாதனை- ப.சிதம்பரம் தாக்கு
More News >>