நாமக்கல் மருத்துவமனை சுவர் இடிந்து டாக்டர் உள்பட 2 பேர் பரிதாப பலி

நாமக்கல் மருத்துவமனை ஒன்றில் கேண்டீன் மேல்சுவர் இடித்து விழுந்ததில் டாக்டர் உள்பட இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தங்கம் என்கிற தனியார் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையின் கட்டிடம் குறுகலான பகுதியில் அமைந்துள்ளதால், வலதுபுறம் உள்ள மருத்துவமனை கேண்டீனின் முன்பக்க மேல் சுவற்றில் சுமார் 12 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் ஒன்றை அமைத்து அதில் மருத்துவமனையில் பெயர் பலகையை வைத்திருந்தனர்.

கடந்த இரு தினங்களாக அங்கு மழை பெய்ததால் அந்த சுவர் மிகவும் ஈரப்பதத்துடன் காணப்பட்டுள்ளது. நேற்று மாலை லேசான மழை பெய்ய தொடங்கிய நிலையில் பலமிழந்து காணப்பட்ட அந்த உயரமான மருத்துவமனையின் பெயர் பலகை தாங்கிய சுவர் முன்பக்கமாக மொத்தமாக பெயர்ந்து விழுந்தது.

அப்போது அந்த டீக்கடையில் நின்று தேனீர் அருந்திக் கொண்டிருந்த பெண் மருத்துவர் கலா, மருத்துவமனை டிரைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் கலாவும் , மோகன்ராஜூம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டு தோறும் மருத்துவமனையின் கட்டிட பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கி வரும் தீயணைப்பு துறையினர் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத இந்த முறையற்ற கட்டுமானத்தை கவனிக்க தவறிவிட்டார்களா? அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து வி்ட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் 7பேர் பலியான சம்பவம்; துறையூர் கருப்பசாமி கோவில் பூசாரி கைது
More News >>