மத்திய பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக அதிகாரி உமா சங்கர் நீக்கம்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமா சங்கர், மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை தேர்தல் ஆணையம் தேர்தல் பணியிலிருந்து நீக்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர். 1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு அரசு துறைகளிலும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு, வெளிமாநில பொது பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் உமாசங்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் வெளிமாநில பொது பார்வையாளராக செயல்பட்டு வந்த உமா சங்கர், அண்மையில் அங்கு உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த உமாசங்கர், அவர்கள் குணம் அடைவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவர் மத பிரசாரத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. பல நோயாளிகள் அவரை தேடி சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.

உமா சங்கர் மத பிரசாரத்தில் ஈடுபட்ட தகவல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார் தெரிவித்தார். இதையடுத்து உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அவருக்கு பதில் இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகார் பார்தி புதிய தேர்தல் பார்வையாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். மத பிரசாரம் செய்வது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.

உள்ளாட்சி தேர்தல்: நீதிமன்றத்தில் குட்டு வாங்கியும் திருந்தாத தமிழக அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
More News >>