குழந்தைக்கு தாயின் சேலை வாசத்தை போலவே வாசகனுக்கு புத்தகத்தின் காகித வாசமும் இன்று உலக புத்தக தினம்!

டிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது.

கால சுழற்சியில் மக்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டு அழிவு நிலையை நோக்கிச் செல்லும் விஷயங்களுக்கு ஐநா சபை சார்பாக சிறப்பு நாட்கள் அனுசரிக்கப்பட்டு, அந்த விஷயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கவன ஈர்ப்பு கொள்ள செய்யத்தான் இப்படி சில விஷேச தினங்கள் வருகின்றன. அண்மையில் வந்த தண்ணீர் தினம், கவிதை தினம் போல இன்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்படுகின்றது.

டச் போன், கீபேட் என டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் வேளையில், பேனாவை பிடித்து எழுதவோ, காகித புத்தகங்களை வாசிக்கவோ இளைஞர்களிடம் ஆர்வம் குறைய தொடங்கி உள்ளது. மகாபாரதம், ராமாயணம், திருக்குறள், பொன்னியின் செல்வன், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என உள்ளூர் முதல் உலக இலக்கியங்கள் வரை PDF வடிவில் டேப்களிலும், கிண்டல்களிலும் வாசகனுக்கு கிடைக்க ஆரம்பிக்க, காகித புத்தகங்களை நவின உலக படிப்பாளி கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டான்.

அதிக வெளிச்சத்தில், டிஜிட்டல் திரையில் புத்தகங்களை படித்தால், கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்துக் கூட அவன் கண்டு கொள்வதில்லை. காகித புத்தகங்களை படிப்பதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமின்றி, எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

புத்தக வாசிப்பை மாணவ பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளியில் வழங்கப்படும் புத்தகங்கள் சுமையாக இருக்கிறது எனக் கூறி, தற்போது பள்ளிக்கூடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாறி வருகின்றன.

இதில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும், புத்தகத்தின் மீது ஆர்வத்தை தூண்ட வைக்கும் வகையிலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் புத்தகம் கண்காட்சிகளும் ஆண்டுதோறும் போடப்படுகின்றன.

ஆனால், பதிப்பகங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவற்றில் இருந்து லாபம் வருவதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

நூலகங்களில் சென்று கல்வி கற்கும் முறையை இன்றைய சமூகம் பெரும்பாலும், தவிர்த்து வருகிறது. குறைந்த அளவிலான அவர்கள் பார்வைக்கு கிடைக்கப்படும் டிஜிட்டல் புத்தகங்கள் தான் உலகிலேயே தலை சிறந்தவை என்ற மாயையும் அது உண்டாக்குகிறது.

உண்மையில் நூலகங்களுக்கு சென்று அலசி ஆராய்ந்து தேடினால், இன்னும் காணக் கிடைக்காத இலக்கிய பொக்கிஷங்கள் பல ஆயிரம் கிடைக்கக்கூடும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயாவில் இயங்கி வந்த 62 ஆண்டு கால பழமை வாய்ந்த நூலகம் வாசிப்பாளர்களின் வருகை குறைந்தததன் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட அவலநிலை உலகில் உள்ள அரிதான பல நூலகங்களுக்கும் ஏற்படாமல் இருக்க, மாணவர்கள் புத்தகங்களின் அருமை அறிந்து கற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா
More News >>