இலங்கை குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு!

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்திய அரசு எச்சரித்த போதும், அலட்சியமாக இருந்ததற்கு  இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், அது குறித்த விசாரணையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியது. இதனையடுத்து, நடந்த முதற்கட்ட விசாரணையில், நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இலங்கையில் பல இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதற்கிடையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் சிறிய வேன் ஆகியவை கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாகப் புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால், இலங்கையில் உச்சக் கட்ட பதற்றம் நிலவுகிறது. அதனால், இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. அமக் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பார்த்த ஷாக்கான போலீசார்
More News >>