லவ் ஜிகாத் கொலையாளிக்கு பணம் அனுப்பிய பாஜக - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

லவ் ஜிகாத் படுகொலையை பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் நியாயப்படுத்திய தோடு, கொலையாளியின் வங்கிக் கணக்குக்கு பெருந்தொகையை சங்பரிவார் அமைப்பினர் அனுப்பியுள்ளனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மாநாட்டையொட்டி திங்கள் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “நாடு இன்று மோசமான கட்டத்தில் உள்ளது. ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக அரசு, நமது நாடு ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அனைத்து அடிப்படை மாண்புகளையும் தகர்த்துக்கொண்டிருக்கிறது.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப் படுகிறது. நாங்கள் உண்பதையே நீங்கள் உண்ண வேண்டும் எனக்கூறுவதோடு வீடுகளில் புகுந்து பரிசோதனை செய்கிறார்கள். கொலை செய்கிறார்கள்.

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் எனக்கூறி ஒரு மனிதனை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். அந்த மனிதன் அலறித்துடிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டதை நாமெல்லாம் காண வேண்டிய கொடுமை நிகழ்ந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான குரல்கள் எழுந்தன.

இந்த படுகொலையை பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் நியாயப்படுத்திய தோடு புகழவும் செய்தார்கள். கொலையாளியின் வங்கிக் கணக்குக்கு பெருந்தொகையை சங்பரிவார் அமைப்பினர் அனுப்பியுள்ளனர்.

ராஜஸ்தானில் கிறிஸ்துமஸ் தொடர்பான ஒரு நிகழ்வை பள்ளிக்குழந்தைகளுடன் நடத்திய போது சங்பரிவார் அமைப்பினர் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, காவல்நிலையம் கொண்டுசென்று போலீசுடன் இணைந்து மீண்டும் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விசாரிக்கச் சென்ற மக்களையும் தாக்கியுள்ளனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து பேராயர் புகார் தெரிவித்தார். அதன்பிறகு பேட்டியளித்த அவர், இந்த அரசின் நடவடிக்கைகள் மீது அவநம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாடு நமக்கு பாதுகாப்பானதாக இல்லை என சிறுபான்மை மக்கள் கருதத் துவங்கியிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

More News >>