ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை: பிசிசிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை குறித்த வழக்கில் இன்னும் நான்கு வார காலத்தில் பிசிசிஐ பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர், ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால், பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், 'ஸ்ரீசாந்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை' என அவரை நீதிமன்றம் விடுதலைசெய்தது.

இருப்பினும் பி.சி.சி.ஐ., ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் பி.சி.சி.ஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர் நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடை நீக்க உத்தரவை ரத்துசெய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஶ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இன்றைய விசாரணையில் ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை குறித்து பிசிசிஐ இன்னும் நான்கு வார காலங்களில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News >>