சசிகலாவால் மட்டுமே அது சாத்தியமாகும்: தினகரன் நம்பிக்கை பேட்டி

சசிகலாவால் மட்டுமே அதிமுகவை வழி நடத்துவது சாத்தியமாகும் என்று டிடிவி தினகரன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து சுவாமி மலையில் நேற்று மாலை டிடிவி தினகரன் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துக் கொண்டு டிடிவி தினகரன் பேசியதாவது: தமிழக மக்களின் நலனுக்கு எதிரான பல திட்டங்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்தி வைத்தார். ஆனால், இப்போதைய தமிழக அரசு மத்திய அரசிடம் பயந்து கொண்டு அந்த திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கைக்கூலியாகவும், பினாமி அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக கூறுகின்றனர். ஜெயலலிதா இருந்த வரை பொது மக்களை பாதிக்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார். ஆனால், அவருடைய பெயரை கூறி ஆட்சி நடத்தும் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்திவிட்டு கண்துடைப்புக்காக 5,10 பைசாவை மட்டும் குறைத்துள்ளது. பேருந்து கட்டண உயர்வால் அடிதட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார். அதன் மூலம் ஆண்டுதோறும் ஆண்டுதோறும் நமக்கு தண்ணீர் கிடைத்து வந்தது.ஆனால், தற்போது காவிரி டெல்டாவில் நெற் பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. தமிழக முதல்வர் நமக்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் மூலம் கேட்டு பெறாமல் கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்துமே மத்திய அரசின் பாராமுகமாக இருக்கிறது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு ஏதும் இல்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழரை கோடி மக்களின் விருப்பத்தினால் தான் ஆர்.கே.நகரில் என்னைவெற்றி பெற வைத்துள்ளனர். அதிமுகவை சசிகலாவால் மட்டுமே தொடர்ந்து வழிநடத்த முடியும். இப்போது மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்களுக்கெதிரான இந்த அரசு விரைவில் அகற்றப்படும். அப்போது ஜெயலலிதாவின் அரசு அமையும்

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>