மாயாவதியை மீண்டும் துரத்துகிறது சி.பி.ஐ.! புதிய வழக்கு தாக்கல்!!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது ரூ.1,179 கோடி ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு எப்.ஐ.ஆர் மற்றும் 6 ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71ஐ பா.ஜ.க. வென்றது. இதுதான் மத்தியில் மோடி ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அங்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. போதாக்குறைக்கு தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, இருப்பது போல், உ.பி.யில் மிகப் பெரிய கட்சிகளாக இருக்கும் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பகையை மறந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணி ஏற்படுவதற்கு முன்பிருந்தே சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் மீதும், பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி மீதும் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறையினர் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இருவரும் தத்தமது ஆட்சியில் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார்கள் என்றாலும் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பா.ஜ.க. அரசு இப்போது துாசி தட்டி எடுத்து வருகிறது.

இந்த வகையில், மாயாவதி மீது நேற்று ஒரு எப்.ஐ.ஆர். மற்றும் 6 ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கைகளை தயாரித்துள்ளது. மாயாவதி முதல்வராக இருந்த போது கடந்த 2010-11ம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான 7 சர்க்கரை ஆலைகள் விற்கப்பட்டன. மேலும் 14 ஆலைகளின் பங்குகள் விற்கப்பட்டன. இதில் அரசுக்கு ரூ.1,179 கோடி ரூபாய் இழப்பு என்று 2013ம் ஆண்டில் சி.ஏ.ஜி. அறிக்கை அளித்தது.

சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையி்ல் யோகி ஆதித்யநாத் அரசு கடந்த 2017ல் மாயாவதி மீது வழக்கு பதிவு செய்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில்தான், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருக்கிறது. மாயாவதி மற்றும் 7 பேர் மீது எப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஊழலுக்கு உடந்தையாக இருந்த உ.பி. மாநில அரசு அதிகாரிகள் யாரையும் எப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை என்பதுதான் விந்தை.

இது பற்றி, பகுஜன் சமாஜ் தேசிய செயலாளர் ராமச்சல் ராஜ்பர் கூறுகையில், 'பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே இத்தனை நாள் கழித்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற பயத்தில் இப்படி செய்கிறார்கள். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்' என்றார்.

விதிகளை மீறும் பிரதமர் மோடி...! தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்றுமா?
More News >>