மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம்..! மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார்.

ரபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ப தாக அறிவித்தது. தீர்ப்பு வந்த சமயம் அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், காவலாளி என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என்று தெரிவித்திருந்தார்.

உச்ச நீதி மன்றம் சொல்லாத ஒன்றை ராகுல் காந்தி கூறியது தவறு என்று கூறி அவருக்கு எதிராக டெல்லி எம்.பியும் பாஜகவைச் சேர்ந்தவருமான மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனி மனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என மனுவில் மீனாட்சி லேகி கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்று தான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் மீனாட்சி லேகி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ராகுல்காந்தி வருத்தம் தெரிவிப்பது வெறும் கண்துடைப்புதான். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றார்.இதையடுத்து ராகுல் காந்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். அதில் பிரதமரை திருடன் என் கோரியதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் அரசியல் களத்தில் திருடன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என கூறினார். மன்னிப்பு கோரியதை பிரமாண பத்திரமாக மே 6-ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

More News >>