வாரணாசியில் மோடியை எதிர்த்த ராணுவ வீரர் வேட்புமனு நிராகரிப்பு!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ராணுவ வீரருமான தேஜ்பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

ராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு கூட கொடுப்பதில்லை’ என்று பேசி, வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் தேஜ்பகதூர். எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றிய இவர், ராணுவ அதிகாரிகளை குறை கூறியதால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

தற்போது இவர், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில், இவரது வேட்புமனுவை நிராகரித்து, தொகுதி தேர்தல் அதிகாரி சுரேந்திரசிங் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், எல்லைப் பாதுகாப்பு படையில் தேஜ்பகதூர் முறைகேடு எதுவும் செய்யவி்லலை என்பதற்காக ‘ஆட்சேபணை இல்லை(என்.ஓ.சி.) சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய கோரப்பட்டது. உரிய நேரத்தில் அவர் அதை தாக்கல் செய்யாததால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

இது பற்றி தேஜ்பகதூர் கூறுகையில், நேற்று மாலை 6 மணிக்குள் என்.ஓ.சி. தாக்கல் செய்ய கூறினார்கள். அதன்படி என்.ஓ.சி பெற்று தாக்கல் செய்தேன். ஆனால், அதை காலை 11 மணிக்குள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்; என்றார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு இளம் வீரருடன் போட்டியிட முடியாமல் மோடி பயப்படுகிறார். தேர்தலில் போட்டியை சந்திப்பதற்கு பதிலாக டெக்னிக்கல் காரணங்களை கூறி அந்த வீரரின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்து விட்டார். மோடிஜீ! நீங்கள் மிகவும் பலமிழந்தவராகி விட்டீர்கள். உங்களை அந்த ஜவான் வெற்றி பெற்று விட்டார் என்று பிரதமரை தாக்கியுள்ளார்.

ஐந்து வருடத்தில் வாரணாசியில் ஒரேயொரு ரோடு போட்டார் மோடி! விளாசித் தள்ளும் பிரியங்கா!!
More News >>