ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 10 கோடி! பா.ஜ.க. குதிரைப் பேரம்! ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

‘‘டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் என பா.ஜ.க. பேரம் பேசியிருக்கிறது’’ என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் புகார் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 7 தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க., அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆனார். ஆனால், மத்திய அரசு அவரை சுதந்திரமாக செயல்படவே விடவில்லை. இதனால், பிரதமர் மோடியை கடுமையாக திட்டிக் கொண்டே இருக்கிறார் கெஜ்ரிவால்.

தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

டெல்லியில் எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு பாஜக குதிரைப்பேரம் நடத்தியுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பத்து கோடி ரூபாய் என்று 7 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியிருக்கிறது. ஏற்கனவே பல முறை இப்படி எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வேலையை பா.ஜ.க. செய்து பார்த்து முடியவில்லை. தற்போது தேர்தல் நேரத்தில் இந்த வேலையில் மீண்டும் இறங்கியிருக்கிறது.

பிரதமர் மோடியே கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்த போது, திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தங்களிடம் தொடர்பில் உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் அணி தாவ தயாராக உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு சிசோடியா கூறினார்.

இதற்கு டெல்லி மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அசோக் கோயல் பதிலளிக்கையில், ‘‘ஆம் ஆத்மி தோல்வி பயத்தில் உள்ளது. உட்கட்சிப் பூசலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்க முடியாமல் பா.ஜ.க. மீது அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள்’’ என்றார்.

அவர் நல்லவர் இல்லை...பதில் கூறமாட்டேன்! –தங்க தமிழ்செல்வனை விளாசிய ஓபிஎஸ்
More News >>