சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார்..! யார் இவர்..? காரணம் என்ன?

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கு இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். யார் இந்த மசூத் அசார்? இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க காரணம் என்ன? என்பதை அறியலாம்....

இந்தியாவால் 25 ஆண்டுகளாக தேடப்படுபவர் மசூத் அசார். இவர் ஒரு தலைமை ஆசிரியரின் மகன் என்பது ஆச்சரியம். சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை துருப்பு சீட்டாக வைத்து இந்தியாவில் பல நாசா வேலைகளை செய்ய வைத்து வருகிறது பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.

ஆசிரியராக மசூத்...

ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கொள்கை நோக்கத்தைக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பின் தலைவர். 50 வயதாகும் இவருக்கு பத்து சகோதர சகோதரிகள் இருக்கின்றனர். பட்டப்படிப்பை முடித்த இவர் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியர் பணியில் இருந்த போதே ஹர்கத் உல் அன்சர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. ஆகையால், சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அறிமுகம் கிடைத்தது. ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றார். இதனையடுத்து, ஹர்கத் உல் அன்சர் அமைப்பின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, அமைப்பிற்காகத் தீவிரமாக நிதி திரட்டினார் மசூர்.

ஐ.எஸ்.ஐ-க்கு தாலிபான் ஆதிரவு.. 

1994-ல் போலி ஆவணம் மூலம் காஷ்மீருக்குள் ஊடுருவிய மசூத் அசாரை, ஆட்டோ ஒன்றில் பயணித்தபோது போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து, காஷ்மீருக்கு சுற்றுலா வந்த எட்டு வெளிநாட்டவரை அவனது கூட்டாளிகள் கடத்தி மசூத் ஆசாரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை இந்திய அரசு அப்போது நிராகரித்து விட்டது.

நான்கு ஆண்டுகள் கழித்து 1999 டிசம்பரில் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டது. மசூத்தின் சகோதரன் ப்ராகிம் தலைமையில் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் விமானம் தரையிறக்கப் பட்டது. அப்போது, ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாலிபான், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு ஆதரவு அளித்தது. இதனையடுத்து, பயங்கரவாதிகளின் நிபந்தனையை ஏற்ற இந்திய அரசு, மசூத் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை விடுவித்தது. பின், பாகிஸ்தானில் புகுந்த மசூத் அசாருக்கு அந்நாட்டு அரசு மறைமுகமாக உதவியது. இந்தியாவை வேரோடு அழிக்கும் வரை அமைதி அடையக்கூடாது என்று கட்டளையிட்டார் மசூத்.

ஜெய்ஷ் இ முகமது உருவாகியது... 

இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்கும் நோக்கில் 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது தான் ‘’ஜெய்ஷ் இ முகமது’’ எனும் அமைப்பு. 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்,  உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத சம்பவங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதோடு, புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மசூத் அசார் மூளையாகச் செயல்பட்டதும், தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனையடுத்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து, வலியுறுத்தியும் வந்தது. இந்தியா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைத் தடை செய்துள்ளன. கடந்த மார்ச் மாதம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்தபோது, சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது.

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி...

இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா.வின் தடைக் குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதில் சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை முட்டுக்கட்டை போட்டுவந்த சீனா, நேற்று ஐ.நா.வில் மசூத் அசார் குறித்த விவகாரம் விவாதிக்கப்பட்டபோது மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா. அறிவித்தது.

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளதால், மசூத் அசாரை சுதந்திரமாகப் பாகிஸ்தானில் நடமாட அந்நாட்டு அரசாங்கம் அனுமதிக்க முடியாது. மசூத் அசாரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதோடு, அவரின் சொத்துக்கள் மற்றும் அவருக்கும் வரும் நிதியையும் பாகிஸ்தான் முடக்க வேண்டும். இது பாகிஸ்தானுக்கு தற்போது மிகப்பெரிய சிக்கலாக உருவாக்கி உள்ளது.

உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் தயங்கியது ஏன்?
More News >>