உணர்ச்சியை ஆழம் பார்த்தது...மனதால் ஜீவியை இறுக அணைத்தேன் ஜெயில் இசையில் நெகிழ்ந்த வசந்தபாலன்

‘ஜெயில்’ படத்திற்காக ஜீ.வி.பிரகாஷ் அமைத்திருக்கும் பின்னணி இசை குறித்து நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஜீ.வி.பிரகாஷ். தற்போது, அவர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘ஜெயில்’ படத்தில் கதாநாயகனாக ஜீ.வி நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை அமைப்பாளரும் இவரே. இப்படத்தில்  நடிகை ராதிகா, அப்பர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், படத்திற்காக ஜீ.வி அமைத்திருக்கும் இசை குறித்து, தான் உணர்ந்த உணர்வுகளை பகிர்ந்துள்ளார் வசந்தபாலன். இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இன்றிரவு இப்போது தான் முடிந்தது.இப்போது தான் வீடு திரும்பி நீர்மையின் கைகளில் என்னை நான் ஒப்படைத்து விட்டு அமர்கிறேன். ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது.

தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது. காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமண தம்பதி போல கைகோர்த்து கொண்டு என் முன் உலாவர கண்ணீர் என்னையறியாமல் விழியில் வழிந்தது.மிக அழுத்தமாக காட்சி பிம்பம் அந்த பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை.என் இசையின் மொழி ஜீவிக்கு எளியதாக புரியும்.

இப்போது கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது.பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று முழுப்படத்தை பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனதால் ஜீவியை இறுக அணைத்து கொண்டேன்.இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது.காலதேவன் துணையிருக்கட்டும்.

இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது.மனம் கொந்தளிப்பு அடங்கியது. ஜெயில் தன்னுடலையே சிறகாக்கிக்கொண்டு பறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறது. ஜெயில் தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஹிட் வரிசையில் இணையும் 5வது படம்... சூர்யாவுக்காக மாஸ் கதை எழுதும் பிரபல இயக்குநர்
More News >>