சர்ச்சை பேச்சு! -கெஜ்ரிவாலுக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள்

தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது.

டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வரும் மே 12-ம் தேதி, மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில், தனித்து போட்டியிடுகிறது.

அதனால், தற்போது காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதனால், முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரப் பணிகளை கவனித்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் டெல்லி தேர்தல் பிரசாரக் களம் அலன் பறக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் டெல்லி மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்து வருவதாக தமிழ் மாணவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி ஷாதரா மாவட்டம், தில்ஷாத் கார்டன் என்ற பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சைன்சஸ் கல்லூரியில் எம்.டி பொது மருத்துவம் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் மர்மமான முறையில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தமிழக மாணவர்களின் அடுத்தடுத்த தற்கொலைக்கு மாணவர்கள் இடையில் ஏற்பட்ட பிரிவினையும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் டெல்லி மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக தமிழக மாணவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

`வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்; பிசிசிஐயின் புதிய கோரிக்கை' - ஒத்திவைக்கப்பட்ட பயணம்
More News >>