மத்திய, மாநில அரசு வேலை ... தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை ..! மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக மாநில அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மத்திய, மாநில வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்குவது கண்டனத்திற்குரியது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது.

திருச்சி பொன்மலையில் நடந்த ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, கோவையில் உள்ள ரயில்வே அலுவலகங்களிலும் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு 2,600 வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனத்தில் தமிழர்களுக்கு 90% முன்னுரிமை வழங்கப்படும். தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெருகின்ற நிலையை திமுக உருவாக்கும் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி!
More News >>