தென்கொரியாவில் வடகொரியா விளையாடும்: அதிபர் கிம் அறிவிப்பு

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் வடகொரியா கண்டிப்பாகப் பங்கேற்கும் என வடகொரியா அதிபர் கிம் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. மேலும் அண்டை நாடான தென் கொரியாவின் மீதும் ஜப்பான் மீதும் வடகொரியா தொடர் தாக்குதல் நடத்தி வந்ததால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் அதிகரித்த நிலையிலேயேக் காணப்பட்டது.

தற்போது தென் கொரியாவில் வருகிற 9-ம் தேதி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வடகொரியா பங்கேற்குமா என்ற கேள்வி சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துவந்த நிலையில் வடகொரியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் என வடகொரியா அதிபர் கிம் அறிவித்துள்ளார்.

மேலும் வடகொரியா வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அதிபர் கிம் தனது சகோதரி கிம் யோ ஜாங்கை அனுப்புவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

More News >>