திடீர் மின் தடை..! ஜெனரேட்டர் ரிப்பேர்..! 5 நோயாளிகள் உயிர் போனது..! மதுரை அரசு மருத்துவமனை லட்சணம்!

மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

தென் தமிழகத்தில், சகல வசதிகளுடன் கூடிய மிகப் பெரிய மருத்துவமனையாக திகழ்வது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இங்கு விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன.

நேற்று மாலையில் மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் திடீரென மின்தடை ஏற்பட்டது. மதுரை நகர் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது.

இந்நிலையில், அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. ஜெனரேட்டரும் பழுதாகிக் கிடந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினர்.மதுரை மேலூரைச் சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள்,விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய 3 பேரின் உயிர் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் பறிபோன அவலம் நிகழ்ந்து விட்டது.

தொடர்ந்து மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதபடி, மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற அவசரமாக பேட்டரிகள் கொண்டு வரப்பட்டு வென்டிலேட்டர் இயக்கப்பட்டதால், சிகிச்சையில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இதற்கிடையே 5 பேரின் இறப்புக்கு மின் தடை காரணமல்ல , இயற்கையான மரணம் தான் என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் வனிதா கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி, இயங்காமல் போன வென்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால், யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ஜெனரேட்டர் ரிப்பேர் என்பதைக் கூட ஒத்துக் காமல், மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியத்தை மறைக்க டீன் வனிதா கூறியுள்ள விளக்கம் பலியான நோயாளிகளின் உறவினர்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யணும் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
More News >>