டெல்லியில் மல்லுக்கட்டும் பாஜக .. ஆம் ஆத்மி.. காங்கிரஸ்..! 3 முனை போட்டி யாருக்கு சாதகம்?

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளைக் கைப்பற்ற நட்சத்திர வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் இறக்கியுள்ளதால் , மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 7 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இந்த மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது வீசிய மோடி அலையால் 7 தொகுதிகளையும் அப்படியே அறுவடை செய்தது பாஜக. ஆனால் அடுத்த வருடமே 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விசுவரூபமெடுத்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 67-ல் வென்று பாஜகவை மண்ணைக் கவ்வச் செய்தது.

தற்போது பாஜகவுக்கு ஆதரவாக அலை எதுவும் இல்லை என்றாலும், ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால், பாஜகவை வீழ்த்தி விடலாம் என்று இரு தரப்புமே திட்டமிட்டது. ஆனால் 2 மாதத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் கூட்டணி முடிவாகவில்லை. இதற்குக் காரணம் டெல்லியில் மட்டுமே ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் கெஜ்ரிவாலோ, காங்கிரஸ் பலமாக இருக்கும் பஞ்சாப், அரியானா, கோவா மற்றும் சண்டிகாரிலும் கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, கூட்டணி அமையாமல் இப்போது டெல்லியில் தனித்தனியே போட்டியிடுகின்றன.

இதனால் மும்முனைப் போட்டி நிலவும் டெல்லியில் வரும், 12-ந் தேதி மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 3 கட்சிகளுமே நட்சத்திர வேட்பாளர்கள் பலரை களமிறக்கியுள்ளதால் தேர்தல் களம் பரபரத்துக் கிடக்கிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், மாநில தலைவர் அஜய் மக்கான், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும், பாஜகவில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இசைக் கலைஞர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் ஆகியோரும், ஆம் ஆத்மி தரப்பில் டெல்லியில் பிரபலமான கல்வியாளர் அடிசி, ஆடிட்டர் ராகவ் சத்தா என பிரபலங்கள் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள டெல்லியில் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் தற்போது ரேசில் பாஜகவும், ஆம் ஆத்மியும் முந்திக் கொண்டு வெற்றிக் கோட்டை எட்ட பலப்பரீட்சை நடத்து கின்றன. காங்கிரஸ் தரப்போ தள்ளாட்டத்தில் இருந்தாலும், பாஜகவுக்கு சாதகமான சூழல் இல்லாததால், ராகுல் காந்தியின் செல்வாக்கால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது. எதிர்ப்பு ஓட்டுகளை காங்கிரசும், ஆம் ஆத்மியும் பிரிப்பதால் வெற்றி நிச்சயம் என்ற உற்சாகத்தில் பாஜக தரப்பு உள்ளது என்பதே டெல்லியின் தற்போதைய கள நிலவரம் என்று கூறப்படுகிறது.

கெஜ்ரிவாலுக்கு கன்னத்தில் 'அறை' விட்ட இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு
More News >>