தேனி உட்பட 46 பூத்களில் மறுவாக்குப் பதிவு..? என்ன காரணம்...? பகீர் கிளப்பும் தேர்தல் அதிகாரி சாகு

தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

தமிழகத்தில் 38 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தலும் கடந்த 18-ந் தேதி முடிவடைந்து விட்டது. இந்நிலையில், தேனி மற்றும் ஈரோடு க்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஓட்டு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி தேனியில் போராட்டமும் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்தது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் சந்தேகம் மேலும் வலுத்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தேர்தலின் போது தேனி உட்பட 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வாக்குச்சாவடிகளில் எந்த நேரமும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

இதனால் தேனி, ஈரோடு தொகுதிகளில் போதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பில் இல்லாததால் முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என்று சாகு விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே தருமபுரி உள்ளிட்ட 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருப்பதாக 15 நாட்களுக்கு முன்பே சாகு கூறியிருந்தார். ஆனால் அந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு இன்னும் உத்தரவிடப்படவில்லை.

இந்நிலையில் தேனி விவகாரம் சர்ச்சையான நிலையில் 46 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடை பெறலாம் என்று புதிய விளக்கத்தை தமிழக தேர்தல் அதிகாரி சாகு கூறியிருப்பது எதிர்க்கட்சிகளிடம் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது . அதே வேளையில், 46 பூத்களில் மறுவாக்குப்பதிவு நடத்தினால் அதனை அதிமுக மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது எனலாம்.

தேனி ஓட்டு மிஷினில் தில்லு முல்லா..? என்னமோ நடக்குது... எல்லாமே மர்மமா இருக்குது...!

More News >>