இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம்... ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட சென்னை வீரர்

ஐபிஎல் குவாலிபையர் ரவுண்டில் நேற்று சென்னை அணி தோல்வி அடைந்தது. இதனால் பைனலுக்கு நேரடியாக செல்ல முடியாமல் போனது. இதனால் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ரவுண்டில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் ரன் கொடுக்காமல் சிறப்பாக பந்துவீசியபோதும், முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இம்ரான் தாஹீர் 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் அது ஆட்டத்தின் பிற்பகுதியில் நடந்ததால், பெரிய அளவில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் குறித்து சென்னை ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ``இந்த சீசனில் எதிர் அணியான மும்பையுடன் மூன்று போட்டிகளிலும் சென்னை தோல்வி அடைந்தது எங்களை ஏமாற்றம் கொள்ள வைக்கிறது. இது விளையாட்டு என்ற போதிலும் தொடர்ந்து சென்னை அணி மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளோம்" என ஏமாற்றத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதனை டேக் செய்து இம்ரான் தாஹீர் பதிலளித்துள்ளார். அதில், ``உங்களை போன்ற உண்மையாக நேசிக்க கூடிய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்ததற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நேற்றைய போட்டியில் நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அடுத்த போட்டியில் எனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடுவேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>