என் மீது குற்றச் சாட்டா? 100 தோப்புக்கரணம் போடணும்...! மோடிக்கு சவால் விட்ட மம்தா

நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

இந்த மக்களவைத் தேர்தலில், மே.வங்கத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும். கணிசமாக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என கங்கணம் கட்டி, பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதில் பாஜகவின் குறியெல்லாம் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் கொடுப்பதிலேயே உள்ளது.

இதனால் பிரதமர் மோடி க்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான சொற்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரையொருவர் சரமாரியாக தனிநபர் விமர்சனம், சவால் விடுவது என மே.வங்க தேர்தல் களத்தில் அனல் பறக்கச் செய்கின்றனர். தன் மீது குற்றச்சாட்டு வைக்கும் பிரதமர் மோடியின் கன்னத்தில் அறை விழும் என மம்தா சமீபத்தில் ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மே.வங்க மாநிலம் பாங்கூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நிலக்கரி சுரங்க ஊழலில் மம்தாவும், அவருடைய கட்சியினரும் ஊறித் திளைக்கின்றனர். திரிணாமுல் கட்சியின் மாபியாகும்பல் அப்பாவி தொழிலாளர்களை சுரண்டுகின்றனர் என்று ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருந்தார்.

பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்ட பாங்கூரில் அடுத்த சில மணி நேரத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா, மோடி கூறிய குற்றச் சாட்டால் ஆவேசமானார் .

அங்குபேசிய மம்தா, நிலக்கரி ஊழலில் எனக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் பங்குண்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடி அவர்களே,அதை நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் 42 தொகுதியிலும் எனது கட்சி வேட்பாளர்களை உடனே வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால் பொதுமக்கள் மத்தியில் இரு கைகளாலும் இரு காதுகளைப் பிடித்துக்கொண்டு 100 தோப்புக்கரணம் போட வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா? என்று மம்தா சவால் விடுத்துள்ளது பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
More News >>